×

கார் கண்ணாடியை உடைத்து பெண் மருத்துவரிடம் 24 சவரன் பறிப்பு

காஞ்சிபுரம், அக். 15: காஞ்சிபுரம் அருகே ராஜகுளம் - ஏனாத்தூர் சாலையில் பெண் மருத்துவரிடம் கத்தியைக் காட்டி மர்ம நபர்கள் 24 சவரன் நகைகளை பறித்துச் சென்றனர். காஞ்சிபுரம் மளிகை செட்டி தெருவை சேர்ந்தவர்  மருத்துவர் அஞ்சலி (51). ஸ்ரீபெரும்புதூரில் கிளினிக் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கிளினிக்கில் பணி முடித்துவிட்டு காரில் காஞ்சிபுரம் நோக்கி திரும்பி வந்தார். காரை சவுந்தரராஜன் என்ற டிரைவர் ஓட்டி வந்தார். அப்போது ராஜகுளத்தில் இருந்து ஏனாத்தூர் சாலை வழியாக காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, டூவீலரில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் காரை வழிமறித்து நிறுத்தினர். காரை நிறுத்தியதும் கண்ணாடிகளை உடைத்து மருத்துவர் அஞ்சலியிடம் இருந்த 24 சவரன் தங்க நகைகளை கத்திமுனையில் பறித்து சென்றனர்.

இதுகுறித்து மருத்துவர் அஞ்சலி அளித்த புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வையாவூரில் மர்ம நபர்கள் 2 பைக்குகளை திருடிச் சென்றனர். இந்த சாலையில் அடிக்கடி தொழிற்சாலையிலிருந்து பணி முடித்து திரும்பும் தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் சென்னையிலிருந்து காஞ்சிபுரம் வரும் திரும்பும் நபர்களிடம் மர்ம நபர்கள் அடிக்கடி தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : doctor ,
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...