உளுந்தூர்பேட்டை, அக். 15:
உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள அலங்கிரி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி பயிலுவதற்காக தினந்தோறும் செம்பியன்மாதேவி, எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை இந்த அரசு பேருந்து அலங்கிரி கிராமத்திற்கு பள்ளி நேரத்தில் வராததால் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்தே செம்பியன்மாதேவி கிராமத்திற்கு சென்றுள்ளனர். பள்ளிக்கு செல்வதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீரென உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இரண்டு புறங்களிலும் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற எலவனாசூர்கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து அனைவரும் கலைந்துசென்றனர். மாணவர்களின் இந்த திடீர் சாலைமறியல் போராட்டம் காரணமாக சுமார் அரை மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.