உளுந்தூர்பேட்டை, அக். 15: திருநாவலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள மக்காச்சோளம் வயல்களை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராமசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேப்புலியூர், நைனாக்குப்பம், குறும்பூர், நாச்சியார்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் பயிர்களில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்த இணை இயக்குனர் ராமசாமி மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதலை தடுத்திட வேளாண்மை துறையின் சார்பில் கிராம அளவில் குழு அமைக்கப்பட்டு தினந்தோறும் கண்காணிக்கப்படுவதாகவும், இதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், இனக்கவர்ச்சி பொறியின் பயன்கள், பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்தும் விளக்கி விவசாயிகளிடம் கூறினார். இந்த ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ், வட்டார வேளாண்மை அலுவலர் சுப்ரமணியன், உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆனந்த், ராஜேஷ் உள்ளிட்ட விவசாயிகள் உடன் இருந்தனர்.