தூத்துக்குடி, அக். 15: தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட ராமதாஸ் நகர் பகுதியில் வசிக்கும் இந்து காட்டுநாயக்கன் சமுதாய மக்கள், தங்களுக்கு சாதி சான்று வழங்குமாறு கலெக்டரிடம் மனு அளித்தனர். மனு விவரம்: ராம்தாஸ் நகரில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களது சமுதாயத்தினர் 60 ஆண்டுகளுக்கு முன்பாக காடுகளில் வாழ்ந்து வந்தனர். முன்னர் வேட்டையாடுதல், தேன் எடுத்தல் மூலிகை பொருட்கள் சேகரித்தல் போன்ற தொழில்களை செய்து வந்தனர். 1980ம் ஆண்டு வேட்டையாடுதல் தடுப்பு சட்டத்தை அடுத்து சவரி முடி தயாரித்தல் போன்ற தொழில் செய்து ஆங்காங்கே குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்ததால் கல்வியறிவு பெறவில்லை. தற்போது எங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க சாதி சான்றிதழ் தேவைப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சிலருக்கு மட்டும் இந்து காட்டுநாயக்கன் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே எங்களது சமுதாயத்தைச் சேர்ந்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சாதி சான்றிதழ் வழங்க உத்தரவிடவேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சந்தீப்நந்தூரி உறுதியளித்தார்.