தூத்துக்குடி, அக். 15: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் காய்ச்சல் காரணமாக 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் அவசர சிகிச்சைக்காக மாவட்டம் முழுவதும் 36 அவசர மருத்துவ வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் சுகாதார பணிகளில் 3 ஆயிரம் பேர் ஈடுபட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும் பலர் தொடர் காய்ச்சல் அறிகுறியோடு சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். இதையடுத்து இவர்களுக்காக தனியாக வலைகளுடன் கூடி படுக்கை வசதி கொண்ட காய்ச்சல் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேர கண்காணிப்பில் உள்ள இந்த வார்டுகளில் 14 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வலைகள் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர் காய்ச்சல் அறிகுறியின் காரணமாக அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தவிர காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக நிலவேம்பு குடிநீர் மற்றும் மருந்துகள் உள்ளிட்டவை மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு ஆகிய இடங்களில் தினமும் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இதுகுறித்து அரசு மருத்துவமனை அதிகாரிகள், சுகாதார துறையினர் கூறுகையில், ‘‘மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு எங்கும் இல்லாத போதும் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலர் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர்’’ என்றனர்.