உயிரிழப்பு அதிகரிப்பு எதிரொலி கடற்கரை பகுதியில் எச்சரிக்கை பலகை: போலீசார் நடவடிக்கை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடலில் குளிப்பதால் உயிரிழப்பு அதிகரித்து வருவதால், போலீசார் சார்பில்  எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது.

 திருவொற்றியூர் கே.வி.குப்பம், ஒண்டிகுப்பம், திருச்சிணா குப்பம் போன்ற கடற்கரை பகுதிகளில் விளையாட வரும் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடலில் குளிக்கும்போது கடல் அலையில் சிக்கி உயிரிழக்கின்றனர்.

கடந்த  மாதம் திருவொற்றியூர் கே.வி.குப்பம் கடற்கரையில் 10ம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர் கடலில் குளித்தபோது கடல் சீற்றத்தால் ராட்சத அலையில் சிக்கி உயிர் இழந்தனர். இவர்களில் 3 மாணவர்கள் உடல்கள் மீட்கப்பட்டது. ஆனால்  ஒரு மாணவன் உடலை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து இதுபோல் கடல் அலையில் சிக்கி உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே, கடலில் குளிப்பதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க திருவொற்றியூர் போலீசார் திருவெற்றியூர் கே.வி.குப்பம், ஒண்டிகுப்பம்,  திருச்சிணாங்குப்பம் ஆகிய கடற்கரைப் பகுதிகளில், கடலில் குளிக்க தடை என்ற எச்சரிக்கை பலகை நேற்று  முன்தினம் மாலை வைக்கப்பட்டது. வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி தலைமையில் திருவொற்றியூர் உதவி ஆணையர் சங்கரன், ஆய்வாளர் ஆரோக்கியராஜ்  மற்றும் போலீசார் கடற்கரை பகுதிகளில் எச்சரிக்கை பலகை  வைத்தனர். மேலும் அந்த பலகையில் சமீபத்தில் எத்தனை பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: