தென்னாப்பிரிக்க மாநாட்டில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு வாய்ப்பு: பாஜ தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தென்னாப்பிரிக்காவில் 3 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் இந்தியாவில் தமிழகத்தை சேர்ந்த பாஜ இளைஞர் அணி தலைவர் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா ஜோகன்ஸ்பர்க் நகரில் “வலிமையான நகரங்கள்  2030” என்ற தலைப்பில் மாநாடு, 13ம் தேதி (நாளை) முதல் 15ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஜோகன்ஸ்பர்க், மெல்போர்ன், கேப்டவுன் உள்ளிட்ட உலகின் 16 முக்கிய நகரங்களை சேர்ந்த இளம் அரசியல்வாதிகள், நகர்ப்புற  மேம்பாட்டு நிபுணர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த வினோஜ் பி.செல்வம் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. வினோஜ் பி.செல்வம் தமிழக பாஜக இளைஞர் அணி தலைவராக உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “பிரதமர் மோடியின் திட்டங்களை நான் அங்கு பேச எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அனைவருக்கும் சுத்தமான தண்ணீரை உறுதி செய்வதற்கான வழிகள், மழைநீர் சேமிப்பு, மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரின்  பயன்பாடு, அனைவருக்கும் வீடு திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பேச உள்ளேன். மேலும் நரகங்கள் சந்திக்கும் பிரச்னை மற்றும் அதற்கான தீர்வு குறித்தும் மாநாட்டில் பேச உள்ளேன்” என்றார்.

தென்னாப்பிரிக்கா செல்ல உள்ள வினோஜ் பி.செல்வத்துக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர், தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜ இளைஞர் அணி தேசிய தலைவர் பூனம் மகாஜன், சி.பி.ராதாகிருஷ்ணன்  உள்ளிட்ட பாஜ தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: