தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சி, 5வது மண்டலம், 53வது வார்டுக்கு உட்பட்ட மூலக்கொத்தலம், பெரியபாளையத்தம்மன் தெரு பகுதியில் 5க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததால், கடந்த சில மாதங்களாக அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து இப்பகுதி மக்கள் இரவில் வீடுகளில் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், மலேரியா, டைபாய்டு போன்றவற்றால் முதியோர், குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தெருவில் தேங்கியுள்ள கழிவுநீரை மிதித்துதான் சென்று வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி, சுகாதாரத்துறை, குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை இப்பகுதி மக்கள் புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துளளது.