காளையார்கோவில், அக்.10: காளையார்கோவில் பேருந்து நிலையம் தற்போது பெய்த சிறு மழைக்கே பயணிகள் பயன்படுத்த முடியாத அளவிற்குச் சேறும் சகதியுமாக மாறிவிட்டது. காளையார்கோவில் சிவகங்கை மாவட்டத்தில் அதிக கிராமங்களை கொண்ட பெரிய ஒன்றியமாக உள்ளது. இப்பகுதியில் தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரி, வர்த்தக நிறுவனங்கள் போன்றவைகளுக்கு நாள் தோறும் 2000க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் சுகாதாரமற்ற முறையில் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சில வருடங்களுக்கு முன் போடப்பட்ட சிமிண்ட் சாலை முற்றிலும் பெயர்ந்துவிட்டது.
நடக்கூட முடியாத அளவிற்குப் பள்ளம் மேடுகளாக உள்ளதால் சிறு மழைக்கே குளம்போல் மாறிவிடுகின்றது. பயணிகள் மற்றும் வியாபாரிகள் விட்டுச்செல்லும் கழிவுப் பொருட்களால் துர்நாற்றம் வீசுகின்றது. தற்போது டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவிவருவதால் உடனடியாக காளையார்கோவில் பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் சுகாதாரத்தை ஏற்படுத்தும் வகையில் மராமத்து பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.