நாமக்கல், அக்.10: நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆலோசனை மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கை: நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், அடுத்த 3 நாட்களுக்கான வானிலையில், வானம் பொதுவாக மேக மூட்டத்துடனும், மிதமான மழை மாவட்டத்தின் சில இடங்களிலும் எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவ மழைக்காலம் முடிவடையும் தருவாயில் உள்ளோம். வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக முடிவடையும் சூழ்நிலை காணப்படுகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கும் என்பதற்கான சாத்திய கூறுகளான கிழக்கில் இருந்து காற்று பருவமழைக்கு முன்னர் கடற்கரையோர மாவட்டங்களில் மழை ஆகியவை இன்னும் புலப்படவில்லை. தென்மேற்கு பருவ மழைக்கால காலம் தொடர்வதால், ஆங்காங்கே மழை எதிர்பார்க்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், கோழிப்பண்ணைகளில் வடகிழக்கு பருவமழைக்கு ஏற்ப, முன்னெச்சரிக்கையாக தண்ணீர் தேங்காமல் வாய்க்கால் மற்றும் கழிவுநீர் தொட்டிகள் பராமரிப்பு, புற்கள் அறவே நீக்கம் மற்றும் குப்பை ஈரமாகாமல் காப்பது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.