மணப்பாறையில் ஆய்வு பணி வீடுவீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

மணப்பாறை, அக்.10: மணப்பாறையில் நகராட்சி, தாலுகா, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட அலுவலகங்களில் கலெக்டர் சிவராசு நேற்று ஆய்வு செய்தார்.மணப்பாறை நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணி ஆகிய பணிகள் தொடர்பாக நகராட்சி ஆணையர், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடினார். இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நர்சரியில் வேம்பு, புளிய மரம், பூவரசை, வாகை மரம் போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதை பார்வையிட்டார். கூட்டத்தில் கலெக்டர் சிவராசு பேசுகையில், ‘மழை காலம் தொடங்க உள்ளதால் சுகாதார துறையின் மூலம் டெங்கு கொசு ஒழிப்புப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளின் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீடுகளில் பாத்திரங்களில் நீர் நிரப்பி வைக்கும்போது மூடி வைக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

மேலும் கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் ஆலாம்பட்டி, செட்டியப்பட்டி, மரவனூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பணியாளர்களிடம் டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக வீடுவீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் மணப்பாறை தாசில்தார் அலுவலகத்தில் மனுக்கள் தொடர்பாக ஆய்வு செய்தபின் பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார். ஆய்வின்போது மணப்பாறை தாசில்தார் தமிழ்கனி, மண்டல துணை தாசில்தார்கள் பிரபாகரன், லோகநாதன், வட்ட வழங்கல் அலுவலர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: