×

மாவட்டத்தில் சிறப்பு குறைதீர் முகாம் நாளை நடக்கிறது

திருச்சி, அக்.10: திருச்சி மாவட்டத்தில் 11ம் தேதி (நாளை) வருவாய்த்துறை சார்பில் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. திருச்சி மாவட்ட வருவாய்த்துறை சார்பில் வாரம்தோறும் ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு கிராமம் தேர்வு செய்து அங்கு வெள்ளிக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ்கள், குடும்ப அட்டை, நிலம் சம்பந்தமான பிரச்னைகள் ஆகியவற்றை அந்தந்த ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சி கிழக்கு தாலுகாவில் செங்குளம், திருச்சி மேற்கில் கோ-அபிஷேகபுரம், திருவெறும்பூர் கூத்தைப்பார், ரங்கம் நாச்சிக்குறிச்சி, மணப்பாறை பழையகோட்டை, மருங்காபுரி கலிங்கப்பட்டி கிழக்கு, லால்குடி எசனக்கோரை, மண்ணச்சநல்லூர் வலையூர், முசிறி மாவிலிப்பட்டி, துறையூர் கொப்பம்பட்டி, தொட்டியம் பொயப்பள்ளி பாளையம் ஆகிய இடங்களில் நாளை (11ம் தேதி) சிறப்பு முகாம் நடக்கிறது. மக்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags : grievance camp ,
× RELATED காவல்துறை சிறப்பு குறைதீர் முகாம்