×

அவிநாசி வட்டார பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்கு 10 பேர் அனுமதி

அவிநாசி,அக்.10:அவிநாசி வட்டார பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் பாதிப்பால்  அவிநாசி, கருவலூர், நம்பியாம்பாளையம்,  துலுக்கமுத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.கருவலூர் பகுதியில் சுகாதார சீர்கேட்டால்  மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. கருவலூர் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த சமையல் தொழிலாளி அய்யாசாமி(63). இவர் கடந்த 2 வாரமாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று, குணமாகாததால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். கருவலூரில் முதியோரையும், குழந்தைகளையும் மர்ம காய்ச்சல் தாக்கி வருகின்றது. இது தொடர்பாக கருவலூர் கிராம மக்கள் கூறுகையில், கருவலூரில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. சாக்கடையும் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. குப்பைகளுடன் சாக்கடை கழிவுநீரும் தேங்கி நிற்பதால் ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றது. இதனால்,  கிராமமக்களுக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. பொதுசுகாதாரம் குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இந்நிலையில், அப்பகுதியில் வசித்து வரும் நான்கு பேருக்கு வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது.  இதுகுறித்து  கிராம மக்கள் கூறுகையில், ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம்  சாக்கடையை சுத்தம் செய்யக் கோரி பல முறை மனுவை கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாக நோய்த் தொற்றும் அபாயத்திலிருந்து சரி செய்ய வேண்டும் என்று கருவலூர் கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல நம்பியாம்பாளையம், துலுக்கமுத்தூர் ஆகிய பகுதிகளிலும் மர்ம காய்ச்சல் பரவி வருகின்றது. மர்ம காய்ச்சல் பாதிப்பால் 10 பேர் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : region ,Avinashi ,health centers ,
× RELATED தமிழகம் – கேரளா எல்லை அருகே சிறுத்தை...