×

திருப்பூரில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துவங்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூர், அக்.10: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் முத்துக்கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;  பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இது தவிர கிராமப்புறங்களில் விவசாயம் மற்றும் சார்பு தொழில்களிலும் ஏழை, எளிய சாமானிய மக்கள், சமூக ரீதியாக பின்தங்கியோர் பல லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவ வசதி எளிதில் கிடைக்கக்கூடியதாக இல்லை. உயிர் காக்கும் மற்றும் விபத்து சிகிச்சைகள் உள்ளிட்ட முக்கிய நோய்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக செலவு செய்து சிகிச்சை பெற வேண்டிய நிலையில் பல ஆயிரம் குடும்பங்கள் கடனில் சிக்கும் நிலை உள்ளது.  இம்மாவட்டம் உருவாகி 10 ஆண்டுகள் கடந்த பின்னும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உருவாக்கப்படாமல் இழுத்தடிப்பது கண்டிக்கத்தக்கது. எனவே உயிர் காக்கும் சிகிச்சை, எலும்பு முறிவு, நரம்பியல் நோய்கள் உள்பட அனைத்து நவீன மருத்துவ வசதிகளும் கிடைக்கும் விதத்தில் திருப்பூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை உடனடியாகத் தொடங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி நிறுவுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. எனவே நோயாளிகள் பயனடையும் வகையில் எம்ஆர்ஐ ஸ்கேன் கருவியை உடனடியாக பயன்பாட்டுக்குக் கொண்டு வர சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : party ,Marxist ,Tirupur ,
× RELATED நாடாளுமன்றத் தேர்தலுக்கான...