கும்பகோணம், அக். 10: குடந்தையில் நடந்த மறைமுக ஏலத்தில் 400 குவிண்டால் பருத்தி விற்பனையானது. கும்பகோணம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நேற்று நடந்தது. இதில் முத்தூர், அகராத்தூர், வேப்பத்தூர், திருவிடைமருதூர், கடலங்குடி, கடம்பங்குடி, கருமாத்தூர், அசூர், ஆதனூர் மற்றும் ஊமையாள்புரத்தை சேர்ந்த 300 விவசாயிகள் 400 குவிண்டால் எடையுள்ள பருத்தியை மறைமுக ஏலத்துக்கு கொண்டு வந்தனர்.
கும்பகோணம், செம்பனார்கோவில், விழுப்புரம், ஆக்கூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 8 பருத்தி வியாபாரிகள் கலந்து கொண்டனர்.வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைகூட கண்காணிப்பாளர் தாட்சாயினி முன்னிலையில் ஏலம் நடந்தது. விவசாயிகள் கொண்டு வந்த பருத்திக்கு விலை நிர்ணயித்து ஏலப்பெட்டியில் வியாபாரிகள் போட்டனர். இதில் ஒரு குவிண்டாலுக்கு அதிகபட்ச விலையாக ரூ.5,789, சராசரியாக ரூ.4,289, குறைந்தபட்ச விலையாக ரூ.3,609 முடிவானது.