×

‘தீபாவளி திருடர்கள்’ கோவையில் முகாம்

கோவை, அக்.10:கோவை நகரில் தீபாவளியையொட்டி நகைக்கடை உட்பட வணிக, வர்த்தக கடைகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.கோவை நகரில் 700க்கும் மேற்பட்ட நகைக்கடை, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தங்க நகை பட்டறை, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணிக்கடைகள் உட்பட பல்வேறு வகையான வணிக, வர்த்தக கடைகள் செயல்படுகிறது. கடைகளில் அடிக்கடி பொருட்கள், பணம் திருடு போவதால், போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். நகை கடைகள், தங்க பட்டறைகளில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் கையாளப்படுகிறது. எனவே வியாபாரிகள் கட்டாயம் கண்காணிப்பு கேமரா அமைக்கவேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய அளவிலான நகை அடகு கடைகள் செயல்படுகிறது. இவற்றில் பல கடைகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்படவில்லை. மேலும் நிதி நிறுவனங்களில் சிலவற்றிலும் கேமரா அமைக்காமல் இருப்பதாக தெரிகிறது. கடைகளின் உள்ளே, வெளியே கண்காணிப்பு கேமரா அமைக்கவேண்டும், கேமராக்களை அவ்வப்போது பராமரிக்கவேண்டும். கேமராக்களின் செயல்பாடுகளை தினமும் ஆய்வு செய்யவேண்டும். சந்தேக நபர் குறித்த விவரம் இருந்தால் அருகேயுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். திருட்டு நபர்கள் கடைக்கு வந்தால் அந்த விவரங்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.  கண்காணிப்பு கேமரா வைத்தால் கடைகளில் கொள்ளை போவதை வெகுவாக தவிர்க்க முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர். நகரில் 15 போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ரோட்டோர கேமராக்கள் செயல்பாடு, சிக்னலில் வைக்கப்பட்ட கேமராக்களின் செயல்பாடுகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கோவை நகரில் நடந்த பல்வேறு நகை, பணம் கொள்ளை வழக்கில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் போலீஸ் விசாரணைக்கு உதவிகரமாக இருந்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திருடர்கள் ேகாவையில் முகாமிட்டு குவித்திருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். துணி மற்றும் பொருட்கள் வாங்க மக்களின் பர்சைகளை பறிக்க டவுன் பஸ்களில் திருடர்கள் சுற்றுவதாக தெரிகிறது.இவர்களை மப்டி போலீசார் மூலமாக கண்காணிக்கும் பணி நடக்கிறது. நகரில் திருட்டு கும்பல், பிக்பாக்கெட் கும்பல், கவனம் சிதற வைத்து பணம் பறிக்கும் கும்பல், நகை பறிப்பு கும்பல் தடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags : Diwali ,thieves ,camp ,Kovil ,
× RELATED ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி செய்த பெண் கைது