அறந்தாங்கி, அக்.10: அறந்தாங்கியில் அறந்தை ரோட்டரி கிளப் சார்பில் இலவச இதய சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்றனர். அறந்தாங்கியில் அறந்தை ரோட்டரி கிளப், மீமிசல் கிங்ஸ் ரோட்டரி கிளப், சுப்பிரமணியபுரம் ஜெம்ஸ் ரோட்டரி கிளப், ஆவுடையார் கோவில் ரோட்டரி கிளப், புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி கிளப், திருச்சி தமிழச்சி ரோட்டரி கிளப் மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இதய மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு அறந்தை ரோட்டரி கிளப் தலைவர் தங்கதுரை தலைமை தாங்கினார். துணை ஆளுனர் கராத்தே கண்ணையன், அறந்தை ரோட்டரி கிளப் அறக்கட்டளை அறங்காவலர் ராசி மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரோட்டரி வருங்கால ஆளுனர் சொக்கலிங்கம் முகாமை தொடக்கி வைத்தார். அறந்தாங்கி டிஎஸ்பி கோகிலா ரத்ததான முகாமை தொடக்கி வைத்தார். முகாமில் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் நோயாளிகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். நோயாளிகளுக்கு இ.சி.ஜி, எக்கோ, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் தொழிலதிபர் முத்தலிப், ஆர்த்தி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் ராமகிருஷ்ணன், அறந்தை ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் முரளிதரன், சுப்பிரமணியபுரம் ரோட்டரி கிளப் தலைவர் முத்துக்குமார், திருச்சி தமிழச்சி ரோட்டரி கிளப் தலைவர் ப்ரியா கோவிந்தராஜ், மீமிசல் கிங்ஸ் ரோட்டரி கிளப் தலைவர் முகமது யூசுப், ஆவுடையார் கோவில் ரோட்டரி கிளப் தலைவர் அண்ணாத்துரை, புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி கிளப் தலைவர் மீனு கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அறந்தை ரோட்டரி கிளப் செயலாளர் பன்னீர் செல்வம் வரவேற்றார். பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.