×

சார்பு நிறுவன ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம், போனஸ்

புதுச்சேரி, அக். 10: இந்திய கம்யூ., கட்சியின் புதுச்சேரி மாநில குழு கூட்டம் மாநில குழு உறுப்பினர் எழிலன் தலைமையில் முதலியார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. அகில இந்திய நிர்வாக குழு உறுப்பினர் அஜிஸ்பாஷா கலந்து கொண்டு தேசிய நிர்வாகக்குழு முடிவுகளை விளக்கி பேசினார். முன்னாள் அமைச்சர் விசுவநாதன், மாநில செயலாளர் சலீம், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், மாநில துணை செயலாளர்கள் அபிஷேகம், கீதநாதன், பொருளாளர் சுப்பையா, நிர்வாக குழு உறுப்பினர்கள் முருகன், தினேஷ் பொன்னையா, சேதுசெல்வம், தனராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: புதுச்சேரி அரசு, டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை பாதுகாக்க விரைந்து செயல்பட வேண்டும். மருத்துவமனைகளில் தனிப்பிரிவு தொடங்க வேண்டும். போதுமான மருந்துகள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். புதுச்சேரி அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 10 முதல் 60 மாதங்கள் வரை ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே இந்த சம்பள நிலுவை சம்பளத்தையும், போனசையும் உடனே வழங்க வேண்டும். தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பாக இத்தொகையை வழங்க வேண்டும். பஞ்சாலைகளை லாபகரமாக இயக்கிட உயர்மட்ட ஆலோசனை குழு அமைக்கப்பட வேண்டும். அரசு துறைகளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. புதுச்சேரி மாநில இளைஞர்களின் நலன் கருதி இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...