×

வங்கி அதிகாரி போல் பேசி வயதான தம்பதியிடம் ₹ 1 லட்சம் திருட்டு

கடலூர், அக். 10: கடலூர் ஆல்பேட்டையை சேர்ந்தவர் சம்பத் (70). ஓய்வுபெற்ற நகராட்சி அலுவலர். இவரது மனைவி விஜயலட்சுமி (63). கடந்த 5ம் தேதி மதியம் 12 மணிக்கு சம்பத்தின் செல்போனுக்கு அழைப்பு வந்தது.மறுமுனையில் பேசிய நபர், தான் தேசிய வங்கி அதிகாரி என்றும் சம்பத்தின் வங்கி கணக்கு பிளாக் ஆகிவிட்டது. அதனை சரி செய்வதற்கு வங்கி எண், ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை உடனே தெரிவிக்குமாறும் அதட்டல் குரலில் பேசி விவரங்களை பெற்றுள்ளான்.அப்போது அருகில் மனைவி விஜயலட்சுமி இருப்பதை தெரிந்து கொண்ட அந்த மர்ம ஆசாமி, அவரிடமும் நைசாக பேசி அவருடைய வங்கிக் கணக்கு விவரங்களையும் பெற்றுள்ளான்.

இந்நிலையில், நேற்று வங்கிக்கு சென்ற தம்பதி அவர்கள் இருவரின் வங்கி கணக்கில் இருந்த பணம் தலா ரூ. 50,000 எடுக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போதுதான் அவர்கள், வங்கி அதிகாரி என்ற போர்வையில் தங்களிடம் பேசிய மர்ம ஆசாமி ஒருவனால் தாங்கள் நூதனமாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.அதனை அடுத்து, சம்பத் கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு சென்று இதுதொடர்பாக புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வயதான தம்பதியை ஏமாற்றிய மோசடி பேர்வழியை கண்டறியும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Tags : bank official ,
× RELATED தொழிலதிபரிடம் 3 லட்சம் லஞ்சம் தனியார் வங்கி அதிகாரி கைது