கடையநல்லூர், அக்.9: கடையநல்லூரை அடுத்த அச்சம்பட்டியில் அரசு விரைவு பேருந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் சரிந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தயிர் தப்பினர். கேரள மாநிலம் பத்தினம்திட்டாவிலிருந்து சென்னைக்கு 13 பயணிகளுடன் அரசு விரைவு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை சென்னை செஞ்சியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் ஓட்டி சென்றார். கடையநல்லூரை அடுத்த அச்சம்பட்டி அருகே நேற்று மாலை சுமார் 6 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது அருகில் உள்ள பெட்ரோல் பங்கிலிருந்து வெளியே வந்த இரண்டுசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக இடது புறமாக பேருந்தை திருப்பும் போது பஸ்கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் சரிந்து சாய்ந்து நின்றது. இதில் பயணம் செய்த அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.