ஓமலூர், செப்.20: ஓமலூர் அருகே மாட்டுக்காரனூர் அரசு பள்ளியின் கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர் அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது.
ஓமலூர் அருகேயுள்ள மாட்டுக்காரனூர் கிராமத்தில், அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக பழைய ஓட்டுக் கட்டிடத்திலேயே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளியின் இரண்டு ஓட்டு கட்டிடங்கள், மிகவும் சேதமடைந்து மழை காலங்களில் மழை தண்ணீர் ஒழுகி வகுப்பறையில் கொட்டுகிறது. பள்ளியின் சுற்றுச்சுவர் மிகவும் பழுதடைந்துள்ளது. நேற்று முன்தினம் பெய்த கனமழையில், பள்ளியின் சுற்றுச்சுவர் மற்றும் குழந்தைகளின் கழிவறை சுவர் 100 அடி தூரம் இடிந்து விழுந்துள்ளது. அப்போது குழந்தைகள் யாரும் கழிவறை பகுதிக்கு செல்லாததால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.