×

நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

நாமக்கல், செப்.20: நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளது.
காய்ச்சல் வந்தால் போலி டாக்டரிடம் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடீஸ் கொசுக்கள், வீடுகளில் உள்ள தண்ணீர் சேமிக்கும் சிமெண்ட் தொட்டிகள், டிரம்கள், குடங்கள், பாத்திரங்கள் ஆகியவற்றில் புகுந்து முட்டையிடாத வண்ணம் முழுமையாக மூடி வைக்க வேண்டும். மேலும் வீடுகளின் உள்ளே பிரிட்ஜ் மற்றும் பூங்தொட்டிகளில், கொசுப்புழு உற்பத்தியை தடுக்கும் பொருட்டு, தினசரி அவற்றை சுத்தம் செய்ய வேண்டும். வீட்டிற்கு வெளியே உள்ள பயன்படுத்தப்படாத ஆட்டு உரல், டயர்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள் ஆகியவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்த தடுக்க வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், தொழில் நிலையங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், காலிமனைகள், பயன்பாட்டில் இல்லாத வீடுகள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலும், உரிய கால அளவுகளில் தீவிர கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.
 கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள, வீடு தேடி வரும் தற்காலிக பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். அனைத்து பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில், காய்ச்சல் கண்டவர்களின் பட்டியலை, அருகாமையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பொதுமக்கள் காய்ச்சல் ஏற்பட்டவுடன், அருகாமையில் உள்ள அரசினர் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று, உரிய பரிசோதனைகள் செய்து சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால், போலி மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Namakkal district ,
× RELATED பாஜவுக்கு தாமரை சின்னம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி