பொதுமக்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

திருப்பூர்,செப்.20: பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு அனைத்துத்துறை அலுவலர்களும் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மை செயலருமான கோபால் தெரிவித்தார்.திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், கலெக்டர் பழனிசாமி முன்னிலையில், திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் (கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம்) கோபால் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், விவசாயிகள் பயன்பெறும் வகையில் குடிமராமத்து திட்டப்பணிகள் மற்றும் நீர்நிலைகள் மேம்படுத்தும் பணிகள் குறித்தும், மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகளின் செயல்பாடுகளை துறைவாரியாக ஆய்வுகளை மேற்கொண்டார்.

மேலும், மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தேவைகள் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டுமெனவும், தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அவர் அறிவுரை வழங்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், உதவி இயக்குநர்  (ஊராட்சிகள்) பாலசுப்ரமணியன், உட்பட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: