×

வருமான வரித்தாக்கல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அவிநாசி,செப்.20: வருமான வரி தாக்கல் செய்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அவிநாசியில் நேற்று நடைபெற்றது.  இதில், மாவட்ட வருமான வரி கூடுதல் கமிஷனர் சுந்தரேசன், துணை கமிஷனர் மணிகண்டன், உதவி கமிஷனர் வேலுசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற திருப்பூர் மாவட்ட வருமானவரித்துறை கூடுதல் ஆணையாளர் சுந்தரேசன் நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 4 லட்சம் பேர் பான்கார்டு வைத்துள்ளனர். அவர்களில், 1.50 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்கின்றனர். ஆண்டுதோறும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை - 15 சதவிகிதம் வரை அதிகரித்து வருகிறது. ஜிஎஸ்டி. மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குபின், சில தடுமாற்றம் ஏற்படுவது இயல்பான விஷயம் தான். அதன் பயனை புரிந்துகொள்ளும் போது, தொழில்துறையினரும், வருமான வரி செலுத்துவோரும் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவர்.

உலகில் 65 நாடுகளில் ஜிஎஸ்.டி முறை உள்ளது.  வணிக நோக்கில் செயல்படும் எந்தவொரு அமைப்பும் கட்டாயம் வரி செலுத்தவேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்தி வருகிறோம். ஒருவரது சேமிப்புக் கணக்கில் திடீரென பெருமளவு தொகை வரவு வைக்கப்படும்போது, ‘இயல்புநிலை தாண்டிய  கணக்கு என்ற அடிப்படையில்’, வருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும். அந்த பணம்முறைகேடாக வரவு வைக்கப்பட்டால்  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  மேலும், ஜி.எஸ்டி. யால் சிறு, குறு தொழில்கள் நலிந்துவிட்டன என்கிற கருத்து ஏற்புடையதல்ல என்று தெரிவித்தார்.

Tags :
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு