திருப்பூர்,செப்.20: தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி நேற்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து துவங்கி நடைபெற்றது. மத்திய அரசின் சுவாச்சா கி சேவா திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் போசான் அபியான் என்ற பெயரில் ஊட்டச்சத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் நகர, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள், திருப்பூர் மகளிர் திட்டம், மற்றும் உணவு பாதுக்காப்பு துறை சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் உறுதிமொழியேற்று துவங்கி,
திருப்பூர் நடராஜா தியேட்டர் எதிரில் உள்ள தெற்கு ரோட்டரி சங்க திருமண மண்டபத்தில் நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பூர் நகர வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயலதா உள்ளிட்ட அங்கன்வாடி பணியாளர்கள், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், ஆகியோர் திரளாக கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகித்து பேரணியில் சென்றனர்.