மஞ்சூர், செப்.20: மஞ்சூர் அருகே பெரியால்நகரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சாலை சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது. மஞ்சூர் அருகே உள்ள பெரியார் நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறார்கள். கரியமலை பிரிவில் இருந்து பெரியார்நகர் கிராமத்திற்கு செல்லும் சாலை சீரமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் சாலை மிகவும் பழுதடைந்து மோசமான முறையில் காட்சியளிக்கிறது.
பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குழிகள், பள்ளங்கள் ஏற்பட்டதால் வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதையடுத்து பெரியார்நகர் சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதை தொடர்ந்து கீழ்குந்தா பேரூராட்சி சார்பில் சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தமிழ்நாடு நகர்புற சாலைகள் கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு சாலை சீரமைப்பு பணிகள் நேற்று துவக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பின் சாலை பணிகள் துவக்கப் பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.