ஈரோடு, செப்.20: ஈரோடு அரசு மருத்துவமனையில் முதல் முறையாக ஒன்றரை வயது குழந்தைக்கு குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.ஈரோடு கொங்கம்பாளையம் ஆவுடையான்காடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (28). டெம்போ டிரைவர். இவரது மனைவி கல்பனா (26). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ரித்திகா என்ற பெண் குழந்தை உள்ளது. ரித்திகாவிற்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு காய்ச்சல், சளி காரணமாக ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்து, ஸ்கேன் எடுத்து பார்த்தனர். அப்போது ரித்திகாவின் வயிற்றில் உள்ள குடல் அமைப்பில் துளை ஏற்பட்டு குடல், இதயம் வரை சென்று சுற்றிருப்பது தெரியவந்தது.
உடனடியாக குழந்தைக்கு ‘டைபர்மெடிக் ஹெர்ணியா’ என்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சிகிச்சையை அரசு மருத்துவமனையின் முதன்மை அறுவை சிகிச்சை டாக்டர்கள் ரகுராஜா, தங்கதுரை, மயக்க மருந்து நிபுணர் பிரேம்நவாஸ் மற்றும் மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
அந்த குழந்தை தற்போது நலமாக உள்ளது. இந்த அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களை ஈரோடு மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் கோமதி, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரபாவதி தேவி ஆகியோர் பாராட்டினர். இதுகுறித்து இணை இயக்குனர் கோமதி கூறியதாவது:
ஈரோடு அரசு மருத்துவமனையில் குடலிறக்கம் எனப்படும் ஹெர்னியாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இவை பெரும்பாலும் ஆண்களுக்கு செய்யப்படுகிறது. ஆனால், குழந்தைகளுக்கு இதுவரை செய்யப்பட்டதில்லை. முதல் முறையாக, குடலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
வயிற்று பகுதியில் ஏற்பட்ட துளை காரணமாக குடல், மார்பு பகுதிக்கு சென்று, இதயத்திற்கு அருகில் சுற்றி இருப்பது ஸ்கேன் மூலம் கண்டுபிடித்தோம். குடல் மார்பு பகுதிக்கு சென்ற நோய்க்கு ‘டைபர்மெட்டிக் ஹெர்னியா’ என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது. உடனடியாக அந்த அறுவை சிகிச்சை செய்து குடலை வயிற்று பகுதிக்கு இறக்கி வைத்துள்ளோம். தற்போது குழந்தை ரித்திகா நலமாக உள்ளார்.இவ்வாறு கோமதி கூறினார்.