போராட்டத்திற்கு ஆதரவு இல்லாததால் மாவட்டத்தில் பெரும்பாலான லாரிகள் ஓடியது

ஈரோடு, செப்.20: ஈரோடு மாவட்டத்தில் போராட்டத்திற்கு லாரி உரிமையாளர்களிடையே போதிய ஆதரவு இல்லாததால் லாரிகள் வழக்கம் போல் நேற்று இயக்கப்பட்டது. ஈரோட்டில் இருந்து ஜவுளிகள், எண்ணெய், முட்டை, மஞ்சள் உள்ளிட்டவை வழக்கம்போல ஏற்றிச் செல்லப்பட்டன. இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில், 60 சதவீத லாரிகள் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன. இந் நிலையில், லாரி ஸ்டிரைக் குறித்த அறிவிப்பினை அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆதரவு கேட்டு முறையாக லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்கு எந்த கடிதமும் வரவில்லை. எனவே, ஸ்டிரைக்கில் ஈடுபடுவது தொடர்பாக லாரி உரிமையாளர்களே முடிவு செய்து கொள்ளலாம் என கூறிவிட்டோம். ஒரு சில லாரி உரிமையாளர்கள் மட்டுமே ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலானோர் வழக்கம்போல லாரிகளை இயக்கி வருகின்றனர். இவ்வாறு லாரி உரிமையாளர்கள் கூறினர். மாட்டு சந்தையில் பாதிப்பு: ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடைபெற்றது. விற்பனையாகும் மாடுகள் சந்தையில் இருந்து லாரி, வேனில் ஏற்றிச்செல்லப்படுவது வழக்கம். நேற்று லாரி ஸ்டிரைக் காரணமாக லாரிகள் குறைவாக இயக்கப்பட்டதால் மாடுகளை வியாபாரிகள் வேன்களில் ஏற்றிச்சென்றனர். இதனால் வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: