அன்னூர், செப். 20:அன்னூர் அருகே இருசக்கர வாகனத்தில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்த வடமாநில தம்பதியை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கோவை அன்னூர் அருகே உள்ள கணேசபுரத்தில் அன்னூர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அக்சயாதாஸ்(40), அவரது மனைவி பிஜைலட்சுமி தாஸ்(30) ஆகியோரை நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், தம்பதி இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீாசர் அவர்களது வாகனத்தை சோதனை செய்தனர். இதில் இருசக்கர வாகனத்தில் 2 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அன்னூர் அருகே குருக்கம்பாளையத்தில் உள்ள அவர்களது வீட்டில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து தம்பதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் கமிஷன் அடிப்படையில் வடமாநில தொழிலாளர்களை தமிழகத்தில் பணியில் அமர்த்தும் கான்ட்ராக்ட் வேலை செய்து வருவதும், ஒடிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி அன்னூர் பகுதியில் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. தெடர்ந்து கணவன் மனைவி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்