வீடுகட்டி தருவதாக 37 லட்சம் மோசடி: மாமியார் மீது ஐஐடி பேராசிரியர் புகார்: மனைவியை பிரித்ததாகவும் குற்றச்சாட்டு

சென்னை: சென்னை ஐஐடி வளாக குடிருப்பை சேர்ந்தவர் விஷால் (35). இவர், ெசன்னை ஐஐடியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன், சாலிகிராமம் எம்ஜிஆர் தெருவை சேர்ந்த மைதிலி (50) என்பவரின் மகள் தீபிகா ராவ் என்பவருடன் திருமணம் நடந்தது. மைதிலி சினிமா டப்பிங் கலைஞராக உள்ளார்.  திருமணத்துக்கு பிறகு விஷால் தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், மைதிலி விருகம்பாக்கத்தில் உள்ள தனது இடத்தில் மகளுக்கு வீடு கட்டி தருவதாக கூறியுள்ளார். இதற்காக விஷால், எஸ்பிஐ வங்கியில் 37 லட்சம் கடன் பெற்று மாமியாரிடம் கொடுத்துள்ளார். இதற்கிடையே விஷாலுக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மாமியார் மைதிலி கடந்த ஒரு மாதமாக தனது மகளை மருமகனிடம் இருந்த பிரித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மருமகனையும் வீட்டில் இருந்து வெளியேற்றியாதாக கூறப்படுகிறது. பலமுறை மனைவியை குடும்பம் நடத்த அழைத்தும் அவர் வர மறுத்ததாக கூறப்படுகிறது.இதற்கிடையே வீடு கட்டுவதற்கு விஷால் கொடுத்த பணத்தில் வீடும் கட்டவில்லை. மனைவியையும் தன்னுடன் சேர்ந்து வாழ அனுப்பாததால், தான் கொடுத்த 37 லட்சத்தை மாமியாரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், பணம் கொடுக்க முடியாது, என்று கூறியுள்ளார். இதையடுத்து விஷால், ‘‘வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை.

எனவே, வீடு கட்ட மாமியாரிடம் கொடுத்த 37 லட்சத்தை பெற்று தர வேண்டும்’’ என்று நெற்று முன்தினம் இரவு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், மனைவியை தன்னுடன் வாழ விடாமல் மாமியார் தடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விருகம்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நந்தினி விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: