விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பேரிச்சம்பழம் ஒரு ஊட்டசத்து மற்றும் நார்சத்து மிகுந்த ஆரோக்கியமான பழமாகும். உலக சந்தையில், இந்தியா கிட்டத்தட்ட 35 சதவீத பேரிச்சம் பழத்தை இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தேவை அதிகமாக இருப்பதால் பேரிச்சையை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்காட்டுகின்றனர். பொதுவாக பேரிச்சை அரபு நாடுகளில் உள்ள பாலைவனங்களில் அதிகமாக வளரக்கூடியவை. ஆனால் இதர இடங்களிலும் பேரிச்சை மரங்களை நல்லமுறையில் சாகுபடிசெய்யலாம். தமிழ்நாட்டில், வணிகரீதியாக தர்மபுரி, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 100 ஏக்கர் பரப்பில் பேரிச்சை சாகுபடி செய்து விவசாயிகள் லாபம் அடைந்துவருகின்றனர். தமிழ்நாட்டில் விவசாயிகள் பேரிச்சை சாகுபடி செய்வதை ஊக்குவிப்பதற்காக, தோட்டக்கலைத்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டுவரும் தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் மூலமாக
2019-20ம் ஆண்டில் பேரிச்சை சாகுபடி செய்வதற்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் என்ற வீதத்தில் மானியம் வழங்கப்படுகிறது.