வேலூர், செப்.20: வேலூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் லாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். மத்திய அரசு சாலை விதிகளை மீறுபவர்களுக்கான அபராத தொகையை அதிகமாக உயர்த்தியது. இதை மறுபரிசீலனை செய்து குறைக்க வேண்டும். டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு போன்றவற்றால் லாரி தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் லாரிகள் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, தமிழகம் முழுவதும் 4.50 லட்சம் லாரிகள் நேற்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன. வேலூர் மாவட்டத்திலும் 3 ஆயிரம் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.