கும்பகோணம், செப். 19: திருக்கருகாவூரில் இருந்து பாபநாசத்துக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் ஆட்டோக்களில் பொதுமக்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். எனவே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்பகோணம் அருகே திருக்கருகாவூர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். திருக்கருகாவூரில் இருந்து அருகே உள்ள பாபநாசத்துக்கு தினம்தோறும் 1000க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். அங்கு பெரும்பாலானோர் விவசாயிகளாகவும், அரசு பணி, தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர். திருக்கரூகாவூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்த கும்பகோணம், பாபநாசம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் காலையில் செல்லும் பேருந்தை தவறவிட்டால் அதன்பிறகு போதுமான பேருந்து வசதிகள் இல்லை. இதனால் பெரும்பாலானோர் ஆட்டோவில் தான் சென்று வருகின்றனர்.பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள் என பல்வேறு பணிகளுக்காக அவசரமாக செல்ல வேண்டியிருப்பதால் முதலாவதாக செல்லும் ஆட்டோவில் ஏறுகின்றனர். ஆட்டோவில் 10க்கும் மேற்பட்டோரை அடைத்து கொண்டு ஆபத்தை உணராமல் டிரைவர்கள் ஓட்டி செல்கின்றனர்.