ஆவணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிவறை மற்றும் குடிநீர் வசதி மறுசீரமைப்பு பணி துவக்கம்

பேராவூரணி, செப். 20: ஆவணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிநீர் வசதி மற்றும் கழிவறை மறுசீரமைப்பு துவக்க விழா நேற்று நடந்தது.கடந்தாண்டு நவம்பர் 16ல் வீசிய கஜா புயலால் அரசு பள்ளிகளில் குடிநீர் மற்றும் சுகாதார அமைப்புகள் சேதமடைந்தன. திருச்சி கிராமாலயா நிறுவனத்தினர் பாதிப்புகளை கணக்கெடுப்பு செய்து மும்பை என்.எஸ்.இ பவுண்டேஷன் நிதி நிறுவன உதவியுடன் கிராமலாயா நிறுவனர் தாமோதரன் வழிகாட்டுதலில் தஞ்சை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அரசு பள்ளிகளில் குடிநீர் மற்றும் சுகாதார மறுசீரமைப்பு செய்து கொடுக்க முன் வந்துள்ளது.தஞ்சை மாவட்டத்தில் 18 அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்பாடு செய்ய வழிவகை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரூ.3.20 லட்சம் மதிப்பில் ஆவணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மறு சீரமைப்பு பணி துவங்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் பெற்றோர் ஆசிரியர் கழக சார்பில் ரூ.1.40 லட்சம் மதிப்பில் 900 மீட்டர் தூரத்திற்கு முள்வேலி அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. தலைமையாசிரியர் கருணாநிதி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அடைக்கலம், பொருளாளர் வீரசிங்கம், துணைத்தலைவர் அபுபக்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: