பிஆர்டிசி ஊழியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்

புதுச்சேரி, செப். 20:   புதுச்சேரி அதிமுக சட்டசபை தலைவர் அன்பழகன் எம்எல்ஏ அளித்த பேட்டி: புதுச்சேரியில் திறந்தவெளி விளம்பர தடைச்சட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. ஆனால் இச்சட்டத்தை ஒழுங்காக நடைமுறைக்கு கொண்டுவரவில்லை. அதிகாரிகள் தாங்களே எந்தெந்த இடத்தில் பேனர் வைக்கலாம் என்று முடிவு செய்கின்றனர். எனவே பேனர் தடைச்சட்டத்தில் கவர்னர் கிரண்பேடி தலையிட்டு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். கவர்னர் கிரண்பேடியுடன் பல விஷயத்தில் எங்களுக்கு முரண்பாடு உள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் அவரின் தலையீடு அவசியமாகிறது. பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, பேனரை பிரிண்ட் செய்து தருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறி வருகின்றனர்.அரசு மருத்துவமனையில் நிறைய காலி பணியிடங்கள் உள்ளது. இதனால் மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பது இல்லை. எனவே அரசு மருத்துவனையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு நிறுவனங்களில் வேலையில்லாமல் உள்ள நபர்களை கொண்டு அந்த பணியிடங்களை நிரப்பலாம்.

பிஆர்டிசி பேருந்துகள் இயக்கப்படாமல் 3ம் நாளாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை உடனடியாக முடிவிற்கு கொண்டுவர வேண்டும். பிஆர்டிசி போன்ற அரசு நிறுவனங்கள் ஏன்? நஷ்டத்தில் இயங்குகின்றன? என்று ஆய்வு மேற்கொண்டால் அங்கு நடைபெறும் முறைகேடுகளும், ஊழலும்தான் காரணம் என்பது தெரியவரும். எனவே அரசு நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்களையும், முறைகேடுகளையும் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: