புதுச்சேரி, செப். 20: புதுவையில் வேலை செய்யும் தந்தையை பார்க்க வந்த மத்திய பிரதேச வாலிபர், மழைநீர் ஒழுகியதை தடுக்க மேற்கூரையில் ஏறியபோது தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் சலிம்கான் (50). 7 வருடங்களுக்கு முன்பு தனியாக புதுச்சேரி வந்த இவர் முதலியார்பேட்டை 100 அடி ரோட்டில் உள்ள ஒரு டைல்ஸ் கடையில் தங்கி வேலை செய்து வருகிறார். 2 வாரங்களுக்கு முன்பு தந்தையை பார்ப்பதற்காக மத்திய பிரதேசத்தில் இருந்து அவரது மகன் சயித்கான் (19) புதுச்சேரி வந்துள்ளார். சில நாட்களாக புதுச்சேரியில் மழை பெய்த நிலையில் சலிம்கான் தங்கியுள்ள வீட்டின் மேற்கூரை சேதமடைந்து நீர் ஒழுகியுள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று அதன் மீது சலிம்கான் ஏறி சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தந்தைக்கு உதவி செய்யும் நோக்கில் சயித்கானும் கூரை மீது ஏறிய நிலையில், அவர் தடுத்துள்ளார்.
ஆனால் தந்தையின் சொல்லை கேட்காமல் மேற்கூரையில் ஏறிய சயித்கான் எதிர்பாராதவிதமாக கூரையில் இருந்து வழுக்கி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சயித்கான் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முதலியார்பேட்டை எஸ்ஐ வீரபத்திரசாமி தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.