×

குடிமராமத்து பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பண்ருட்டி, செப். 20:  பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையம், கொக்குப்பாளையம் பகுதியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் குளம் தூர்வாரும் பணி, பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். எல்என்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அய்யனார் குளம், பூங்குணம் ஊராட்சி பகுதியில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகள், குளம் தூர்வாரும் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பயணியர் மாளிகையில் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறும்போது, கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீர் வரத்து வாய்க்கால்கள் அனைத்தையும் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. 60 சதவீத பணிகள் நடந்து முடிந்துள்ளது.

பருவமழையை முன்னிட்டு வெள்ள பாதிப்பு பகுதிகளை முன்னெச்சரிக்கையாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கொண்டு புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. சவுக்கை கட்டைகள், மணல் மூட்டைகள், பொக்லைன் இயந்திரங்கள் தாலுகா வாரியாக தயார் நிலையில் வைக்க கூறப்பட்டுள்ளது. பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், வீடு கட்டும் பயனாளிகளுக்கு மணல் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கை காவல்துறை மூலம் எடுக்கப்பட்டு வருகிறது என்றார். அப்போது திட்ட அலுவலர் காஞ்சனா, தாசில்தார் கீதா, பிடிஓக்கள் சீனுவாசன், ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் ருக்குமணி, ஊராட்சி செயலர் ராஜ்குமார், ஒன்றிய மேற்பார்வையாளர் முல்லை, மண்டல துணை வட்டாட்சியர் ராஜா, வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணா, கிராம நிர்வாக அலுவலர்கள் பழனிவேல், ஜெகதீசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags : District Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...