மதுரை, செப்.19: பெரியார் பஸ் ஸ்டாண்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் தமுக்கம் மைதானத்தை தற்காலிக பஸ் ஸ்டாண்டாக மாற்ற மாநகராட்சி முன்வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி உள்பட பல்வேறு மாநகராட்சிகள் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்பட்டன. மதுரை மாநகராட்சி சார்பில் பெரியார், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டுகளை ஒருங்கிணைத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.159 கோடியில் நவீனப்படுத்தப்படும் பணி நடந்து வருகிறது. இதற்காக பஸ் ஸ்டாண்டிற்குள் இருந்த 446 கடைகள் அகற்றப்பட்டன. தற்போது ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டில் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, அதில் கான்கிரீட் போடுவதற்காக கம்பிகள் கட்டும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. பஸ் ஸ்டாண்டுகளை மூடுவதற்கு முன்பே பஸ்களை நிறுத்துவதற்கு ஏதுவான இடத்தை மாநகராட்சி தேர்வு செய்யவில்லை. அதற்குப்பதிலாக பஸ் ஸ்டாண்டிற்கு வெளியிலேயே பஸ்களை நிறுத்தி வைத்து பயணிகளை ஏற்றுகின்றனர். இதனால் எந்த நேரமும் பெரியார் பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் தினமும் நெரிசலில் சிக்கித்தவித்து வருகின்றனர்.