திண்டுக்கல் கோ- ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.25 ேகாடி

திண்டுக்கல், செப். 19: திண்டுக்கல் கோ- ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனையாக ரூ.1.25 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்திலுள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்பு விற்பனையை நேற்று கலெக்டர் விஜயலட்சுமி துவங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், ‘நெசவாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த கோ-ஆப்டெக்ஸ் என அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1935ம் ஆண்டில் துவங்கப்பட்டு, தொடர்ந்து 84 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது. இந்தியாவில் உள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் திகழ்வதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் பேராதரவும்தான் முக்கிய காரணமாகும்.

வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல வண்ணங்களில் பலவித வடிவமைப்புகளில் மென்பட்டு சேலைகள் பருத்தி, பட்டு சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் நவீன காலத்திற்கு உகந்தமான ஜீன்ஸ் டாப்ஸ், குர்தா வேட்டி, சேலைகள், சுடிதார் ஆகியவை தீபாவளி பண்டிகைக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது, உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியை கொண்டு இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் புடவை இரகங்கள் விற்பனைக்கு உள்ளது. தவிர பாரம்பரிய ரகங்களை புதுப்பிக்கும் விதமாக கண்டாங்கிச் சேலைகள், செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்கிடி சேலைகள், பண்டிகைக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக லினன் சட்டைகள், லினன் பருத்தி சட்டைகள் கண்ணை கவரும் வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் ரகங்களை மின் வணிக வலைதளமான < www.cooptex.com > என்ற இணைய தளத்தின் மூலம் பெற்று கொள்ளலாம்.

திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் மட்டும் கடந்த ஆண்டு ரூ.97.70 இலட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.125 லட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி பயனடைய வேண்டும்’ என்றார்.இதில் மேலாளர் (அரசுத்திட்டம்) ஞானபிரகாசம், மேலாளர் (வடிவமைப்பு,உற்பத்தி) லெட்சுமிநரசிங்கராவ், திண்டுக்கல் மேலாளர் (பொ) செண்பகபிரபா மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: