திருப்பூர், செப். 19: திருப்பூரில் தனியார் நகை அடகு கடையில், கவரிங் வளையல்களை அடமானம் வைத்து மோசடி செய்ய முயன்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் அவிநாசி ரோடு தண்ணீர்பந்தல் காலனியில் தனியார் நகை அடகு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் கிளை மேலாளராக அன்பரசு (32) உள்ளார்.நேற்று முன்தினம் இந்த நிறுவனத்துக்கு வந்த திருப்பூர் வேலம்பாளையத்தை சேர்ந்த சுதீர்குமார் (30), அவிநாசி சேயூரை சேர்ந்த லீலாவதி (36) ஆகியோர் 20 கிராம் எடை உள்ள இரு வளையலை தங்கம் எனக்கூறி, ரூ.50 ஆயிரம் கடனாக கேட்டனர். அங்கிருந்த ஊழியர்கள் வளையலை பரிசோதனை செய்ததில் அவை தங்கமுலாம் பூசப்பட்ட கவரிங் வளையல் என தெரியவந்தது. இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, உரிய பதில் அளிக்காமல் அங்கிருந்து செல்ல முயன்றனர். இதையடுத்து, அவர்களை சக ஊழியர்களின் உதவியுடன் பிடித்த மேலாளர் அன்பரசு, இருவரையும், 15 வேலம்பாளையம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் இருவரை கைது செய்தனர்.