ஈரோடு, செப். 19: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறையினர் தர்ணாவில் ஈடுபட்டனர். ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவசங்கர், மாநில துணை தலைவர் பாஸ்கர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கிராமப்புறத்தில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தினை எளிமையான வழிமுறைகளை மேற்கொள்ளாமல் ஊழியர்கள் மீது கடுமையான நெருக்கடியை செய்து வருவது கண்டிக்கிறோம். ஜல்சக்தி அபியான் செயலாக்க திட்டத்தில் நிதியை ஒதுக்கும் போது, அதற்குரிய கால அவகாசமும் வழங்க வேண்டும். மேலும் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு பணி விதிகளையும் உருவாக்க வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.