கோவை, செப். 19: சோனியாகாந்தி பற்றி அவதூறு கூறிய தமிழக அமைச்சரை கண்டித்து கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காரமடையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்கிரஸ் கட்சி பற்றியும், சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி பற்றியும் அவதூறு பரப்பிய தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து இப்போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமை தாங்கி, இப்போராட்டத்தை துவக்கி வைத்தார். இதில், பங்கேற்ற காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்டித்து கோஷம் எழுப்பினர். அவரை, தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கக்கோரியும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், வட்டார தலைவர்கள் ராஜேந்திரன், ஸ்ரீதர், நகர தலைவர் துரைசாமி, நிர்வாகிகள் தங்கமணி, விஜயகுமார், மீனாஹரி ராமலிங்கம், சின்னராஜ், ஜெகநாதன், நவீன்குமார். விஜயன்,
சிவாஜி கந்தசாமி, நாகராஜ், சாத்தியலீலா, விவின், ரங்கநாதன், ஷேக் அமீன், பேரூர் மயில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.