கோவை, செப். 19: கோவையில் வரும் 24ம்தேதி கட்டுமான தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் நடத்த முடிவுசெய்துள்ளனர். தமிழ்நாடு கட்டட கட்டுமான தொழிலாளர் சங்க (ஏஐடியுசி) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. சங்க மாநில துணை பொதுச்செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில், கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:
கட்டுமான தொழிலாளர்கள் சட்டத்தை அழித்து ஒழிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மத்திய அரசிடம், தொழிலாளர் நல நிதி ரூ.40,000 கோடி உள்ளது. இதை, மத்திய அரசு வேறு பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறது.
தொழிலாளர் நல வாரியம் உள்ளிட்ட உரிமைகளை பறிக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்படுகிறது. நடைமுறையில் உள்ள நல உரிமை சட்டங்களை பறிப்பதை கண்டித்தும், தொழிலாளர்களுக்கு எதிரான புதிய சட்டத்திருத்தங்களை கொண்டு வருவதை கண்டித்தும் வரும் செப்டம்பர் 24-ம் தேதி மாநிலம் தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக, அன்றையதினம் காலை 10 மணிக்கு கோவை சிவானந்தாகாலனியில் பெருந்திரள் தர்ணா போராட்டம் நடத்தப்படும். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டட கட்டுமான தொழிலாளர்கள் பங்கேற்பார்கள். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.