ஈரோடு, செப். 19: ஈரோடு வ.உ.சி.பூங்காவில் ரூ.6.48 கோடி மதிப்பில் சீரமைப்பு பணி தீவிரமாக நடக்கிறது. ஈரோடு வ.உ.சி.பூங்கா 10 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது இந்த பூங்காவின் ஒருபகுதியில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்திற்காக ராட்ச குடிநீர் தொட்டி கட்டப்பட்டு வரும் நிலையில் மற்றொரு பகுதியில் பூங்காவை சீரமைக்க மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.6.48 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. இந்த பூங்கா சீரமைப்பு பணிகளுக்கான டெண்டர் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக., எம்.எல்.ஏ.தென்னரசுவின் மகன் கலையரசனுக்கு சொந்தமான செந்தூர் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் எடுத்துள்ளது.
இதற்கான கட்டுமான பணிகள் துவங்காமல் இருந்த நிலையில், பூங்காவை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பூங்காவில் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகிறது. வ.உ.சி.பூங்காவின் அருகில் உள்ள சிறுவர் பூங்காவிலும் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த இரு பூங்காக்களிலும் பணிகளை விரைந்து முடித்து பொங்கல் பண்டிகையின்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் திட்டமிட்டுள்ளனர்.