ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு செப்.30ல் பூட்டு போடும் போராட்டம்

ஈரோடு, செப். 19: ஈரோடு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வரும் 30ம் தேதி கலெக்டர் அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என மக்கள் மன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் மன்ற மாநில அமைப்பாளர் செல்லப்பன் கூறியதாவது: கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை தொடர்பாக மனு அளிக்கின்றனர். ஆனால், அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.  இதனால், மனவேதனையடைந்த மக்கள் ஆங்காங்கே சாலைமறியல் மற்றும் தீக்குளிப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் வரும் 30ம் தேதி கலெக்டர் அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: