மணப்பாறை, செப்.19: வையம்பட்டி வட்டாரத்தில் 50 சதவீத மானிய விலையில் விதைகள் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.மணப்பாறையை அடுத்த வையம்பட்டி வட்டாரத்தில் நடப்பு பருவத்தில் பருவ மழை பெய்துள்ளது. இதனையடுத்து, விவசாயிகள் ஆர்வமுடன் விவசாய பணிகளை செய்து வருகின்றனர். நடப்பு சம்பா பருவத்தில் நெல், சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு தேவையான டிகேம்-13 மற்றும் கோஆர்-51 உள்ளிட்ட தரமான சான்று பெற்ற நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் உளுந்து வம்பன்-8 சான்று பெற்ற விதைகள், நிலக்கடலை தரணி மற்றும் ஜிஜேஜி-9, சான்று பெற்ற விதைகள் இருப்பு வைக்கப்பட்டு 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.