முசிறி, செப்.19: முசிறி தாலுகா தா.பேட்டை ஒன்றியம் அழகாப்பட்டி கிராமத்தில் உள்ள வயலில் எட்டுப்பட்டிக்கு சொந்தமான கோயிலில் பயன்படுத்தும் கரகம், சொம்பு, சிலைகள் இருப்பதாகவும், அந்த புதையலை வெளியில் எடுப்பதற்கு பொதுமக்கள் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ளது அழகாப்பட்டி கிராமம் இங்குள்ள ஏரிக்கரையின் அருகே அழகாப்பட்டியை சேர்ந்த பொன்னம்பலம் என்பருக்கு சொந்தமான வயலில் உள்ள மண்மேட்டில் வாதநாராயண மரத்தின்கீழே சுமார் 200 வருடங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட எட்டுப்பட்டிக்கு சொந்தமான கோயிலில் பயன்படுத்தும் சொம்பு, கரகம், சாமிசிலைகள், புதையல் இருப்பதாகவும், புரட்டாசி மாதம் பிறந்து குறிப்பிட்ட தினங்களுக்குள் எடுத்தால்தான் வெளியே வருவதாகவும், பக்தர்களுக்கு நல்லாசியும், மழைவளத்தையும், விவசாயம் செழிக்கவும் செய்வேன் என பெருமாள் சுவாமி பக்தர் ஒருவரின் கனவில்வந்து சொன்னதாக தகவல் பரவியது. இந்நிலையில் அழகாப்பட்டி கிராமத்தை சேர்ந்த தனபால் என்பவர் பொன்னம்பலத்தின் வயலில் காளிஅம்மனும், மாரியம்மனும் விளையாடுவதாகவும், அங்குள்ள மண்முகட்டில் கரகம்பாலிக்கும் சொம்பு உள்ளதாகவும், அதனை வெளியே எடுத்து வழிபட வேண்டும் என சுவாமி அருள்வாக்கில் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து எட்டுப்பட்டியைசேர்ந்த பொதுமக்கள், முக்கியஸ்தர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பொக்லைன் இயந்திரத்துடன் பொன்னம்பலத்தின் வயலுக்கு வந்தனர்.