ஏற்காட்டில் தொடர் மழை 3 ஆண்டுக்கு பிறகு புதுஏரிக்கு நீர்வரத்துv

சேலம், செப்.19: ஏற்காட்டில் பெய்து வரும் தொடர் மழையால், 3 ஆண்டுக்கு பிறகு புதுஏரிக்கு நீர் வந்துள்ளது. சேலம் மாவட்டத்தில், நடப்பாண்டு ஏற்காட்டில் அதிகளவில் மழை பொழிந்துள்ளது. ஏற்காடு மலைப்பாதையில் பெய்யும் மழைநீரானது, அடிவாரத்தில் உள்ள புது ஏரிக்கு வருகிறது. கடைசியாக கடந்த 2015ம் ஆண்டு புது ஏரிக்கு நீர் வந்தது. கடந்த 3 ஆண்டாக போதிய மழை இல்லாததால், புதுஏரிக்கு நீர் வரத்து இல்லாமல் போனது. இந்த நிலையில் ஏற்காட்டில் கடந்த ஒன்றரை மாதமாக பெய்து வரும் தொடர் மழையால், கடந்த இரு நாட்களாக புது ஏரிக்கு மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் மழை தொடர்ந்தால் கட்டாயம் இன்னும் ஒரு வாரத்தில் புது ஏரி நிரம்பும்.   புது ஏரி நிரம்பினால், அதனை தொடர்ந்து மூக்கனேரியும் நிரம்பும். அதிலிருந்து வெளியேறும் மழைநீர் திருமணிமுத்தாற்றில் கலக்கும். இதன் காரணமாக திருமணிமுத்தாற்று வழித்தடத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்ப வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். சேலத்தில் 108.7 மி.மீ., மழைசேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: கரியகோவில் 21, இடைப்பாடி 17.6, பெத்தநாயக்கன்பாளையம் 14, சங்ககிரி 13.4, ஏற்காடு 8, தம்மம்பட்டி 7.2, ஆணைமடுவு 6, சேலம் 2.5, ஓமலூர் 1.2, மேட்டூர் 1, வீரகனூர் 7, கெங்கவல்லி 5.4, ஆத்தூர் 1.4, காடையாம்பட்டி 3 என மொத்தம் 108.7 மில்லி மீட்டர் மழை பதிவானது.

Related Stories: