திருவையாறு, செப். 19: போக்வரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் திருவையாறு பகுதியில் தமிழக அரசு அறிவித்துள்ள புறவழிச்சாலை உடனடியாக நிறைவேற்றகோரி இன்று (19ம் தேதி) முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக திருவையாறு வணிகர் சங்கங்கள் மற்றும் அனைத்து பொதுநல அமைப்புகள் அறிவித்திருந்தது. இதுதொடர்பாக திருவையாறு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் இளம்மாருதி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று நடந்தது. அரசு சார்பில் டிஎஸ்பி பெரியண்ணன், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் பழனியப்பன், வருவாய் ஆய்வர் விஜயராமன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர். பொதுமக்கள் சார்பில் வணிகர் நல கழகம் சார்பில் சத்தியமூர்த்தி, ராஜா, சண்முகம், மோகன், வணிகர் சங்கம் சார்பில் சாமிநாதன், விவேக், ஈ.வே.ரா மார்க்கெட் சங்கம் சார்பில் சங்கர், சவுரிராஜன், வர்த்தக சங்கம் சார்பில் திலகர், திமுக சார்பில் நகர செயலாளர் நாகராஜன், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் குமணன் பங்கேற்றனர்.