பாபநாசம், செப். 19: பாபநாசம் அருகே அம்மாப்பேட்டை அடுத்த உக்கடையில் வேளாண்மைத்துறை சார்பில் லாபகரமான நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் அலுவலர் ராஜதுரை வரவேற்றார். அம்மாப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா பங்கேற்று பேசுகையில், விவசாயிகள், பண்ணை மகளிருக்கு அவசர காலத்தில் கைகொடுப்பது நாட்டுக்கோழி வளர்ப்பு. தற்போது நாட்டு கோழி முட்டை மற்றும் இறைச்சிக்கு நல்ல விலை கிடைத்து வரும் வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் நாட்டுக்கோழி வளர்ப்பை மேற்கொண்டு லாபம் ஈட்ட வேண்டும் என்றார். நாட்டுக்கோழி பண்ணை துவங்கும்போது கவனிக்க வேண்டியவை, கோழி குஞ்சுகள் பராமரிப்பு, நோய்த்தடுப்பு முறைகள், தீவனம் அளிக்கும் முறைகள் குறித்து சாலியமங்கலம் கால்நடை மருத்துவர் செல்வராஜ் பேசும்போது எடுத்துரைத்தார். ஏற்பாடுகளை உதவி அலுவலர் சூரியமூர்த்தி, அட்மா மேலாளர்கள் செல்வி, மங்களேஸ்வரி, பிரியா செய்திருந்தனர். வட்டார மேலாளர் செல்வி நன்றி கூறினார்.